|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram
Joined: 23 Oct 2006 Posts: 782
|
Posted: Wed Aug 27, 2008 10:38 am Post subject: A Handful of Piano Picks (21) - "Rocking Piano" |
|
|
A Handful of Piano Picks - 21
"Rocking Piano"
பல்வகை உணர்வுகள், சூழல்களுக்கான பியானோ பாடல்களைப் பார்த்தோம். கேட்டவுடன் துள்ளவைக்கும், "இப்படியோர் இசை சாத்தியாமா?" என்று கிள்ளவைக்கும் சில பியானோ பாடல்கள் பிரபலப் படாத காரணத்தினால் அரிதானதாக உள்ளது. "இப்பாடல்கள் ஏன் இப்படி அறியப்படாமல் உள்ளது??!!" என்று ஆழ்மனத்தில் ஒரு வேதனை உணர்வு, இவற்றைக் கேட்கும் போது ஏற்பட்டாலும், பாடல் அளிக்கும் பேரானந்தம், அவ்வின்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பேரின்பம், அவ்வேதனையை அடித்துப் போக்கி உற்சாகத்தை விதைக்கிறது!
முதலாவதாக "நீ" படத்தின்:
அடடா என்ன அழகு
பாடலின் துவக்கமே முரட்டுத்தனமாக ட்ரம்பெட், ப்ராஸ் செக்க்ஷனுடன் துவங்கும். பாடலின் தாள நடையும், பியானோ முன்னிசையும் முற்றிலும் புதுமை, வித்தியாசம்! பியானோ ஓட்டத்துடன் கிட்டாரும், அக்கார்டியனும் சேர்ந்து முடிகையில் எடுக்கப்படும் பல்லவி. Undoubtedly Unconventional!
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு
அனல் மேல் வைத்த மெழுகு அது போல் நீயும் உருகு
இரண்டு வரிகள் முடிந்து மூணாவது வரியில் அரபிக் இசை சாயலுடன் வந்து விழும் - எவரும் எதிர்பாராவிதமாக!
அன்பே என்று தழுவு செந்தேன் அள்ளி பருகு
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு
முதல் இடையிசை- Wood பாஸ், ப்ராஸ், இசைக்க பின்னணியில் ஸ்பானிஷ் Tap Dance வகைக்கான இசை அழகாக இசைக்கும். முடிகையில் அக்கார்டியன் எடுத்துக் கொடுக்க சரணம் சுகமாய்த் துவக்கம்.
தேடும் சின்ன கண்கள் உன்னோடு போராடலாம்
ஆடும் தள்ளாடும் கால்கள் என்னோடு பின்னாடலாம்
வா வா என்று மெல்ல ஏதோ ஒன்று சொல்ல
ஊஞ்சல் என்ற உள்ளம் உன்னை தேடி செல்லும்
இரண்டாம் இடையிசை முதலாவது போலவே தொடங்கும். ஆனால் புதுமையைக் கொஞ்சமாவது செய்யாவிடில் நம் இசை அரசருக்குத் தூக்கம் வந்து விடுமா? ப்ராஸில் ஒரு அற்புத ஜாஸ் அரேஞ்மெண்ட்டை என்கிருந்தோ கொண்டு வந்து இடைச் சேர்க்க, உயர்வது கேட்பவர்களது ரசனை! வியப்பது ரசிப்பவர்களின் மனது!!
ஆசை இல்லை என்று எப்போது யார் சொன்னது
ஆடும் பொன் மேனிகண்டு ஆடாமல் யார் நின்றது
காலம் இன்று போகும் காதல் என்னவாகும்
பாடம் சொல்ல வேண்டும் பாவை துள்ள வேண்டும்
70'களில் ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு பின்னணி இசையாக இப்பாடலின் இசையை அமைத்தால் அது சாலப் பொருத்தமானதாக இருக்கும் என்பது மிகைச் சொல்லே அல்ல. மெல்லிசை மன்னர் தன்னிடத்தே கொண்டிருந்த உலக இசைத் தாக்கம் இதுபோல் பாடல்களின் பளிச்சென மிளிர்கின்றது.
இவரது இசையை இன்னும் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் கிட்டும் என்ற ஒரு பிரம்மிப்பு நிச்சயமாக நம்மை ஆட்கொள்கிறது!
கேட்க: http://www.msvtimes.com/music/songs/a.html
"அல்லிப் பந்தல்" - வெண்ணிற ஆடை
பாடல் துவங்கும் முதல் நொடியிலேயே கணித்துவிடலாம் - இது ஸ்ரீதர் படப் பாடலென்று. புதுமை, தன் படங்கள், படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய இலக்குகளுக்குச் சென்றடைய வேண்டும் என்னும் எண்ணத் தீ, இதத்தனையும் தாண்டி படத்தின் ஒவ்வொறு விநாடியும் 'பிரம்மாண்டம்' கொண்டு சிறப்பித்துக் காட்டக் கூடிய
திறன் - இவ்வனைத்தும் ஸ்ரீதர் படங்களின் குணாதிசயங்கள். இந்த குணங்கள் அனைத்தும் அவரது படங்களின் உயிர்
நாடியான இசைக்கும் பொருந்தும். இச்சிறப்புகளுக்கு சற்றும் விதிவிலக்கில்லா ஒரு பாடல் - மெல்லிசை மாமன்னரின் கைவண்ணத்தில் பூத்த "அல்லிப் பந்தல்" பாடலாகும்.
எனது நண்பன் வெங்கி மூலம் அறிமுகம் ஆன ஒரு அற்புதப் பாடல். ஆனால் பலருக்குக் கொஞ்சமும் அறிமுகம் இல்லாப் பாடல். இப்படத்தின் மற்ற அனைத்துப் பாடல்களும் பல ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இருக்க, இப்பாடல் ஏனோ பிரபலமாகாதது ஒரு புதிரே! (படத்தில் இப்பாடல் காட்சியாக்கப் பட்டுள்ளதா? தெரியவில்லை)
அட்டகாசமான பியானோவுடன் துவங்கும் முன்னிசை - முதல் முறை 'யூட்லிங்க்' வருமிடத்தில் மறுமுறை அழகான வயலின் ஆர்கெஸ்ட்ரேஷனை அமைத்தவர் உண்மையிலேயே பெரும் மேதையாகத்தான் இருக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னரைப் பற்றித் தெரியாதவன் ஒருவன் பாடலைக் கேட்கும் போதே உறுதியாகக் கூறிவிடுவான்.
அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா
அங்கொரு மல்லிகை கிள்ளியெடுத்து பாட்டு பாடிடவா
அந்த நாடகம் வரவிடி
இந்த மேனியைச் செலவிடு
பியானோ இடையிசையை எவ்வாறு விவரிப்பது! அதன் பின்னணியில் வரும் ஆர்கெஸ்ட்ரேஷனை என்ன கூறுவது!
பொன்னொடு பூவொடு கன்னியின் மெல்லிடை
கண்ணில் வந்து விழுந்து
கண்ணொடு நெஞ்சொடு கையொடு தந்தது
கனிந்தே வரும் விருந்து
செங்கனிச் சாறு பிழிந்து
சிந்தி விடாமல் அருந்து
ஆஹா! கவியரசே! இளமை பொங்கும் வார்த்தை விளையாட்டு!
இப்பாடலின் நடையை ஒரு 'Complex Rhythm' என்று தான் கூற வேண்டும். 'Complex' என்பது பரிசோதனைகளுக்கு அஞ்சா மெல்லிசை மன்னரின் தாளச் சிறப்பைக் கூறுவதற்கே தவிற கேட்பவர்களுக்குத் துளியும் கிடையாது!
பாடல் முழுவதிலும் வரும் 'யூட்லிங்க்' அற்புதம்!
கேட்க: http://www.smashits.com/music/tamil/songs/3689/muthuraman-vennira-aadai.html
இசையை எழுத்தால் விவரிக்க முடியாத நியதியை மற்றுமொருமுறை உணர்ந்து கொண்டு அடுத்த பாடலுக்குச் செல்கிறேன்.
"யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ"
மூன்றரை நிமிடங்களில் உலகப் பயணம் சாத்தியமா? அதிலும் விமானத்தின் வேகத்தையும், அந்த பயணத்தில் அருகில் சுகமாய்த் தவழும் மேகத்தையும் ரசித்துக் கொண்டே சாத்தியமா?
வேகத்தை உணர்த்த பாடலின் ரிதம்; மேகத்தை உணர்த்த தேன் சொட்டும் மெலடி, இனிமை. இவற்றை அழகாய், கணிசமாய்,
கச்சிதமாய்க் கொண்ட இப்பாடலில் கண்டிப்பாக உலகப் பயணம் சாத்தியம் என்று கேட்பவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக உணர்த்தியிருக்கிறார் நம் மெல்லிசைப் பேரரசன்!
பந்துபோல் துள்ளிக் குதிதுக்கொண்டு துவங்கும் ட்ரம்ஸ் முன்னிசை, பந்தின் வண்ணங்களாக தாளத்தை அழகு படுத்தும் வகையில் கிட்டார் chords! எலக்ட்ரிக் கிட்டார் அழகாக இறக்கி முடிக்க, எங்கிருந்தோ
"உள்ளேனய்யா!" என்பதைப் போல், அக்கார்டியன் தன் இருப்பை இனிமையாகக் காட்டிக் கொண்டு பாடலைப் பல்லவிக்குக் கொண்டு செல்லும்.
உச்ச ஸ்தாயியில் பல்லவி...
யாரோ ஆடத்தெரிந்தவர் யாரோ
ஆசை நிறைந்தவர் யாரோ
வேக மிகுந்தவர் யாரோ
மேடையில் வருவாரோ
இடையிசையில் பியானோவும், கிட்டார்களும், ரோலிங் ட்ரம்ஸ் ரிதமும், சிம்பால் ஒத்துழைப்பும் - 'ராக்-ன்-ரோல்' இசையில் 'Rocking' பியானோ! எத்தனை அழகு! ('ரம்பம்பம் ஆரம்பம்' பாடலின் சில இடங்கள் இந்த இடையிசையின் தாக்கத்திற்கு ரொம்பவே பக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது)
ட்ரம்ஸ்-கிட்டார் அழுத்தமான தீர்மானத்துக்கு வர...சரணம்:
மெதுமெதுவாக மேலே செல்லும் வரிகளில் இனிமையோ இனிமை..
துள்ளும் உடல் துள்ளும் வரை
சொல்லும் கதை சொல்லும் வரை
(துள்ளும்)
அடுத்த வரிகளில் என்னென்ன வற்றை ரசிப்பதென்றே தெரியவில்லை:
துன்பமென்பது போய்விடும்
சொர்க்கம் போலிது ஆய்விடும்
இப்பாடலைக் கேட்கையில் உண்மையிலேயே "துன்பமென்பது போய்விடும்" இவ்வுலகம் "சொர்க்கம் போல் ஆய்விடும்"!
ஒவ்வொரு வரி முடிகையிலும் "ஹ.. ஹ.. ஹா" குரல் (இது மெல்லிசை மன்னரின் குரல் போல்தான் இருக்கிறது) அட்டகாசமான ஃபில்லிங்க்.
அழகு மேனியைக் காணலாம்
ஆசை உள்ளவர் ஆடலாம்
பின்னணியில் கோரஸ் Chords, குறிப்பாக, 'ஆசை உள்ளவர் ஆடலாம்' வரியில் - சிலிர்க்க வைக்கிறது!
பாடலின் இறுதியில் சில விநாடிகளே வரும் ட்ரம்ஸ் 'குட்டி' தனி ஆவர்தனம் ரசிக்கத்தக்கது!
ஓட்டம் சற்றும் நின்றிடாத ஓடையாய், இனிமை பூத்துக் குலுங்கும் சோலையாய் இப்படி ஒரு அப்பழுக்கற்ற பாடலை வழங்க என்ன ஒரு தெளிந்த மனநிலையை மெல்லிசை மன்னர் பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கையில் உண்மையில் உள்ளம் உணர்ச்சிவசப்படுகிறது!
'Rocking Piano' தலைப்பில் இறுதியாக இன்னுமொரு இனியதோர் பாடல்.. 'பவானி' படத்தில்..
"மல்லிகை மான்விழி"
நாலாவது பாடலாக இப்பாடலைத் துணிந்து ஆரம்பித்து விட்டேன்! ஆனால் பாடலை ஒருமுறை கேட்டவுடன் அமைதியாக Laptop'ஐ மூடிவைத்து விட்டு படுப்பதுதான் சிறந்தது என்று தோறிவைட்டது.
மழை நீரால் வீட்டு நிலைப்படியில் பாதமளவிற்கு உள்ள தண்ணீரைத் 'தாண்டிக் கடந்து விடலாம்' என்று நினைத்துக் கொண்டிருப்பவனைத் திடீரென கன்னியாகுமரி கடற்கரையோரம் நிறுத்தி "விவேகானந்தர் பாறையை நீந்திப் போய்த் தொடு!" என்று ஆணையிட்டால் அவனுக்கு ஏற்படும் பிரமிப்பும், வியப்பும், பயமும் எனக்குள் பாடலை நான் ஒருமுறை கேட்டவுடனே ஏற்பட்டது! 'எப்படி இப்பாடலைப் பற்றி நாம் எழுதப்போகிறோம்?' என்று வியப்பு.
எனினும் இன்றெடுத்த இத்தலைப்பிற்கு முழு மரியாதை செய்ய வேண்டும் என்கிற கடமையுணர்ச்சியின் காரணத்தினால் துணிந்து மூச்சடக்கி நீந்த முற்பட்டு விட்டேன்.
பியானோ முன்னிசையே பாடலின் மாணிக்க முத்தாய்ப்பு!
மல்லிகை... ஹோ
மான்விழி தேன்மொழி
காதலி என்றெல்லாம்
கூறுவார் கேளடி
மல்லிகை.
"கூறுவார் கேளடி" முடிந்து "மல்லிகை" எடுக்கப்படும் இடத்தில் தான் என்ன அருமையான இறக்க ஏற்றம்!
பல்லவி மறுமுறை வரும் போது ஒவ்வொறு வார்த்தை முடிகையிலும் சோம்பல் முறித்துக் கொண்டே எழும் வயலின் அழகுக்கழகு!
பாடலின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பல இடங்களில் 'துடுக்'கென வரும் ப்ரஷ் ட்ரம்ஸ் அருதிகள், ஸ்கேல் மாற்றங்கள், பல்வகை பாங்கூஸ் நடைகள், இரண்டு இடையிசைகளிலும் மின்னும் பியானோ என்று பற்பல விந்தைகள்.
சரணத்தில்..
அணைத்தால் தடுப்பேன்
கொடுத்தால் சிரிப்பேன்
இவ்வரிகளின் கடைசியில் வரும் ஃப்ளூட் மிக இனிமை..
பாடல் முடிகையில் கடைசியாக "மல்லிகை..இ...இ" என்று அற்புதமாக வரும் இடம் "சபாஷ்!
இதுவல்லவோ பாடல்!!" என்று ஆணித்தனமான தீர்மானத்திற்கு நம்மை வரவழைக்கும்.
இந்த அற்புதமான, அரிய, பிரம்மிக்க வைக்கும் தன்மைக்குரிய பாடல்களில் மெல்லிசை மன்னரின் இசையைத் தவிற மற்றொரு பெருஞ்சிறப்பு உள்ளது. அது என்னவென்று எளிதாக யூகிக்கலாம். 'இளமை' எனும் வார்த்தையை என்றென்றும் இளமையாக வைக்கக்கூடிய ஒரு குரல். ரசிகர்களின் இசை ரசனையைச் சுண்டி இழுக்கும், துள்ளவைக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் தீங்குரல். மெல்லிசை மன்னரின் கட்டுக்கோப்பிலா கற்பனைத் திறனுக்கும், ஜாஸ், பாப், ராக்-அன் -ரோல், ஃப்யூஷன் என்று அவரது உலக இசைத் தழுவல்கள் கொண்ட பாடல் ஓட்டங்களுக்கும்
அநாயாசமாக ஈடுகொடுக்கக் கூடிய குரலென்றால் அது இவரது குரல்தான் என்பதில் சந்தேகம் இல்லை!
கேட்க: http://www.msvtimes.com/music/songs/m.html
மெல்லிசை மன்னரின் பாடல்களில் மற்றொரு தனிச்சிறப்பொன்று உள்ளது. அவர் செல்லமாக 'மீட்டர்' (மேட்டர்) என்று குறிப்பிடும் விஷயம். அதுதான் 'சந்தச்சுவை'.
இந்த தலைப்பில் மட்டும் நாம் பக்கம் பக்கமாக எழுதலாம். எனினும் ஒரு துளி பிரசாதம் போல் இதில் ஒரு சிறிய வலம் வருவோம்.
இவரது பேட்டிகளில் சந்தங்களை விளக்க பல முறை கூறியிருக்கும் எடுத்துக்காட்டுப் பாடல்கள்:
"பேசுவது கிளியா"
"வீடு வரை உறவு"
"மாம்பழத்து வண்டு"
"சின்ன சின்ன ஆசை"
நான்கு பாடல்களும் ஒரே சந்தமுடைய பல்லவிகளாகும்.
இதே போல் வேறு ஒரு பாடல் தொகுப்பையும் நம் அரசர் சந்தங்களுக்காக நினைவுகூறலாம்:
இப்போது நாம் பார்த்த "மல்லிகை" பாடலில் வரும்....
"மான்விழி தேன்மொழி காதலி என்றெலாம் கூறுவார் கேளடி". ஒவ்வொரு வார்த்தையும் தனித்தனியாக மெட்டமைத்து வழங்கப்பட்டிருக்கும். இதே போல் வேறு சில பாடல்களிலும் காணலாம்.
"ஊட்டி வரை உறவு" படத்தில் வரும் அதிநவீன பாடல்:
"தேடினேன் வந்தது நாடினேன் தந்தது வாசலில் நின்றது வாழவா என்றது"
இப்போது மெல்லிசை மன்னர் பாணியிலேயே "தேடினேன்" பாடலில் "மான்விழி..." வரியையும்...."மான்விழி
தேன்மொழி.." வரியில் "தேடினேன்" பாடலில் பல்லவியையும் பாடிப் பாருங்கள். சாலப் பொருந்தியிருப்பதை வெகுவாக ரசிக்கலாம்!
இதே சந்தத்தில் இன்னொரு பாடல்: "மேலாடை விழிகள்" பாடலில் சரணத்தின் இறுதியில் வரும்
"மன்னவன் சேலையில் மந்திரம் பாடிடும்" வரி!
இதோ மற்றுமோர் பாடலும் கூட: "சொர்கம் பக்கத்தில்.." பாடலில் வரும் சரண வரிகள்:
"கொஞ்சம்வா கொஞ்சவா கிட்டவா கிள்ளவா" வரி!
இந்த நான்கு பாடல்களின் மெட்டுக்களையும் அதன் வரிகளையும் மாற்றி மற்றிப் பாடிப் பாருங்கள். பொருத்தமாகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்கும்.
இதே போல் வேறிரு பாடல்கள்; முற்றிலும் மாறுபட்ட, வெவ்வேறு சூழல்களுக்கான பாடல்கள். பல்லவி மட்டும் நச்சென ஒரே சந்தத்தில் அமைந்திருக்கும்...
நமது வத்ஸன் மூலம் எனக்கு அறிமுகமான "பாமா விஜயம்" படத்தின்..
"நினைத்தால் சிரிப்பு வரும்".
இப்பாடலும் "சிரித்தாள் தங்கப் பதுமை" பாடலும் ஒரே சந்தம். மனத்திற்குள் மெட்டை மாற்றிப் பாடுங்கள். பொருந்தும்!
மெல்லிசை மன்னரின் இசைக்கும் எல்லை இல்லை!
இவரது இசையின் சிறப்புகளை எழுதிக்கொண்டே இருந்தால் அதற்கும் எல்லை இல்லை !!
"நான் நிரந்திரமானவன்; அழிவில்லை" என்று கண்ணதாசன் தனக்கு மட்டுமில்லாமல் தன் ஆருயிர் நண்பனான மெல்லிசை மன்னர் சார்பாகவும் எழுதியுள்ளார் என்பது என் கணிப்பு !!!
(To be con _________________ Ramkumar |
|
Back to top |
|
|
Venkat
Joined: 18 Dec 2007 Posts: 601 Location: Chennai, where MuSic liVes
|
Posted: Thu Aug 28, 2008 10:04 pm Post subject: |
|
|
Dear Ram,
Great write-up...
Excellent analysis...
At the end... you said it...
"Rocking Ram" endru koorinaal migayalla... _________________ Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh |
|
Back to top |
|
|
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Fri Aug 29, 2008 12:08 pm Post subject: |
|
|
G R E A T, Ram !!
Ramki _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
Ram
Joined: 23 Oct 2006 Posts: 782
|
Posted: Fri Aug 29, 2008 6:44 pm Post subject: Thanks! |
|
|
Dear Venkat & Dad,
Thank you for the replies! _________________ Ramkumar |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|